Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Tuesday, November 3, 2015

காய்கறி அவியல்

காய்கறி அவியல்
காய்கறி அவியல்
தேவையான பொருட்கள் (2 பேருக்கு):

  1. 5 வகையான காய்கறிகள் – 300 கிராம்
  2. தேங்காய் – 4 முதல் 5 துண்டுகள் வரை
  3. சீரகம் – 3/4 தேக்கரண்டி
  4. பச்சை மிளகாய் – 1 அல்லது காரத்திற்கேற்ப
  5. தயிர் – 1/2 குவளை
  6. கடுகு, உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
  7. கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
  8. இந்துப்பு – சுவைக்கேற்ப


செய்முறை:

  1. உங்களுக்கு விருப்பமான 5 வகையான காய்கறிகளை நீளவாக்கில் ஒரே அளவாக இருக்கும் படி நறுக்கிக் கொள்ளவும் (உதாரணம்: கேரட், பீன்ஸ், முருங்கைக்காய், வெண்பூசணி, அவரை, கத்தரிக்காய்). 
  2. அந்தக் காய்கறிகளை அப்படியே, அகலமான பாத்திரத்திற்கு மாற்றி அடுப்பில் வைக்கவும். பாத்திரத்தை மூடி வைத்து சமைக்கவும். ஒரு சில நிமிடங்களில் மூடியைத் திறந்து காய்கறிகள் நீர் விட்டிருக்கிறதா என்பதை சோதித்துக் கொள்ளவும். அவ்வப்போது காய்கறிகளைக் கிளறி விடவும். காய்கறி நன்றாக வேக, அதில் இருக்கும் நீர்த்தன்மையே போதுமானது. ஒருவேளை பாத்திரம் அடிபிடிப்பது போல் இருந்தால் மட்டும், சற்று நீர் தெளித்து வேக விடவும். அனைத்து வகை காய்கறிகளும் நன்கு வெந்த பிறகு, அடுப்பை அணைக்கவும்.
  3. ஒரு மிக்ஸியில் தேங்காய் துண்டுகள், பச்சை மிளகாய் மற்றும் சீரகத்தைப் போட்டு, லேசாக தண்ணீர் விட்டு, சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை காய்கறிப் பாத்திரத்தில் போட்டுக் கிளறவும். அதனுடன் தயிர் மற்றும் தேவையான அளவு இந்துப்பு சேர்த்து கிளறவும்.
  4. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அது நன்கு சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை போடவும். கடுகு வெடித்த உடன் அடுப்பை அணைத்து விட்டு, அவற்றை காய்கறி இருக்கும் பாத்திரத்தில் போட்டு, நன்றாக ஒருமுறை கிளறி விடவும். அதன் மீது கறிவேப்பிலையைத் தூவவும்.

குறிப்பு:

  • இந்த எண்ணை இல்லாத சமையல் செய்முறையை, நான் இயற்கை வாழ்வியல் பணிமனையில் கற்றுக் கொண்டேன்.
  • தேங்காய் மற்றும் இந்துப்பு ஆகியவற்றை சமையலில் பயன்படுத்தும் பொழுது, அடுப்பை அணைத்த பிறகே பதார்த்தத்தில் சேர்க்க வேண்டும். இந்தக் குறிப்பை எப்போதும் நினைவில் கொள்ளவும்.
  • அவியலை, சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளலாம். அல்லது சாதம், சாம்பாருக்கு ஒரு வகையான பொரியலாகவும் சாப்பிடலாம். 

1 comment :